நலம் தரும் எள்ளு
எள் என்ற வார்த்தையே வழக்குச் சொல்லாக எள்ளு என்று அழைக்கப்படுகிறது. எள்ளு தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. இது சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடைய தானிய விதை அகும். எள்ளு பெரும்பாலும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்டது. இதில் அனைவராலும் பரவலாக அறியப்படுவது கருப்பு எள்ளு ஆகும். இந்தியா, மியான்மர், தான்சானியா, சூடான் போன்ற நாடுகளில் எள்ளு அதிகம் பயிரிடப்படுகிறது. எள்ளால் செய்த பலகாரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை மற்றும் கோவை போன்ற ஊர்களில் எள்ளால் செய்த பலகாரங்கள் உற்பத்தி நடைபெறுகின்றது. தமிழர்கள் அனைவரும் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் நல்லெண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். தமிழ்க் கலாசாரத்தில் பெரும்பாலான வீடுகளில் தலைக்கும், உடம்பிற்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இதன் மூலம் எள்ளு நமது வாழ்வில் பலகாரங்களாக, எண்ணெயாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
எள்ளின் மருத்துவ பயன்கள் ஏராளமானது. கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை சுத்தம் செய்கிறது. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் எள்ளை தொடர்ந்து சாப்பிட்டால் அந்தக் கோளாறு நீங்கும். எள்ளு புற்று நோய் செல்களை வளர விடாமல் பார்த்து கொள்கிறது. அதனால் குடல் புற்று, கல்லீரல் புற்று வராமல் தடுக்கப்படுகிறது. எள்ளில் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி, ஈ மற்றும் இரும்புச் சத்தும் ஏராளமாக உள்ளது. இதனால் பழங்காலத்தில் வீடுகளில் எள்ளால் செய்த பலகாரங்களை தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதனால் இதை சாப்பிடும் குழந்தைகள் அனைவரும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். எள்ளின் பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மணம் வீசும் எள்ளால் செய்த பலகாரங்கள் அனைத்தும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் மிக பிடித்தமான ஒன்றாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் எள்ளில் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்கள் அதை பலகாரங்களாக, எள்ளுருண்டையாக, இனிப்பு வகைகளாக, எண்ணெய்யாக தமது வாழ்வில் தொடர்ச்சியாக அதை பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் நமது முன்னோர்களின் உணவுப் பழக்கங்களையும், பலகார வகைகளையும் அறிந்து அவர்களைப் பின்பற்ற நினைப்பது நாம் அனைவரும் பெருமைப்படத்தக்க விஷயமாகும்.



