Monday, 4 May 2020


மணம் வீசும் ஏலக்காய்

   ஏலக்காய் நாம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான ஒன்று. இவ்வுலகில் நான்காயிரம் வருடங்களுக்கு மேலாக ஏலக்காய் பயன்பாட்டில் உள்ளது. நமது இந்தியா தான் ஏலக்காயின் பூர்வீகம் ஆகும். இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஏலக்காய் அதிகமாக பயிரிடப்படும் மாநிலங்கள் ஆகும். உலக அளவில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், தாய்லாந்து, தான்சானியா, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகள் ஏலக்காய் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நாடுகள். இந்தியாவில் சைவ, அசைவ உணவுகள், பாரம்பரிய இனிப்பு வகைகள், தேனீர் முதலியவற்றில் ஏலக்காய் பயன்பாடு மிக அதிகம். பழங்காலத்தில் ஏலக்காயை நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் அது தரும் மருத்துவ பயன்பாட்டிற்காகவும் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.




      ஏலக்காயை எதாவது ஒரு வழியில் உணவில் எடுத்துக் கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். அஜீரணக் கோளாறுகளை சரி பண்ணி செரிமானத்திற்கு உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நமது உடலில் தங்கியுள்ள கொழுப்பைக்  கரைக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க ஏலக்காய் உதவுகிறது. ஏலக்காயை தேனீரில் கலந்து குடிப்பதனால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். ஏலக்காய் இருமல் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை தடுக்கிறது. நமது வாயில் உள்ள மோசமான கிருமிகளை போக்குவதில் ஏலக்காய் முக்கிய பங்கு ஆற்றுகிறது. புற்று நோய் செல்களை தடுத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.

   இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஏலக்காய் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை நமது உணவுக் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. நம்மால் மறக்க முடியாத நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் அனைத்திலும் ஏலக்காய் தவறாது இடம் பெற்றிருக்கும். மிகச் சிறப்பானவற்றை தேடிப்பிடித்து உணவுப் பழக்கத்தில் சேர்ப்பது நமது முன்னோர்களின் வாடிக்கை ஆகும். அதனால் தான் ஏலக்காயும், நமது முன்னோர்களைப் போல பல ஆயிரம் வருடங்கள் கடந்தும், நம்முடைய உணவுப் பழக்கத்திலும், பாரம்பரிய இனிப்பு வகைகளிலும் மணம் வீசி நமக்கு ஏராளமான நன்மைகளைக் கொடுக்கின்றது.


தவிர்க்க முடியாத சிறுதானியம் கேழ்வரகு

     நாம் அனைவராலும் நன்கு அறியப்பட்ட சிறுதானியம் கேழ்வரகு ஆகும். இதை தெலுங்கில் ராகி என்றும், தென் தமிழ்நாட்டில் கேப்பை என்றும் அழைப்பார்கள். கேழ்வரகு தென்னிந்தியாவில் தோன்றியது என்றும், ஆப்பிரிக்கா மற்றும் எத்தியோப்பியாவில் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது மக்களின் அன்றாட வாழ்வில் மிக நெருக்கமான சிறுதானியம் கேழ்வரகு ஆகும். மக்கள் இதை கேழ்வரகுக்  கூழ், கேழ்வரகுக்  களி, கேழ்வரகு தோசை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு பலகாரங்கள் என்று பல வழிகளில் சாப்பிடுகின்றனர். இந்தியாவில் தமிழகமும், கர்நாடகாவும் கேழ்வரகு அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலங்கள். கேழ்வரகு மனிதர்களுக்கு அளவற்ற ஆரோக்கிய பயன்களைத் தருகிறது.



     கேழ்வரகு வெயில் காலங்களில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. தமிழகத்தில் வெயில் காலங்களில் கேழ்வரகுக் கூழ் விற்கும்  தள்ளு வண்டி கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று கேழ்வரகுக் கூழை குடிப்பதை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். நம் தாத்தா பாட்டி காலத்தில் கிராமங்களில் மதிய வேளையில் கேழ்வரகுக் கூழை அதிகமாக குடிப்பார்கள். இதனால் அவர்கள் 80, 90 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். கேழ்வரகு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கேழ்வரகில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு இதை நாம் கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கேழ்வரகு நார்ச்சத்து அதிகமாக இருக்கும் சிறுதானியம் ஆகும். கெட்ட கொழுப்புகளை  கரைத்து உடல் எடையை சீராக வைப்பதற்கு உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறவும் உதவுகிறது. நமது உடலில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

  கேழ்வரகில் அளவற்ற சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் நமது முன்னோர்களின் வாழ்விலும், இன்றைய தலைமுறையிலும் அது தவிர்க்க முடியாத சிறுதானியமாக திகழ்ந்து நமக்கு நிறைய நன்மைகளைக் கொடுத்து ஆரோக்கியத்தை காத்து கொண்டிருக்கிறது.