Friday, 27 March 2020

   இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள் 


             இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பங்களின்  வளர்ச்சி அனைத்து துறைகளிலும் உச்சம் பெற்றுள்ளன.  மனித இனம் கற்பனை செய்து பார்க்க முடியாத வசதிகளை பெற்றுள்ளது இன்று. இந்தியாவை விட பல மடங்கு முன்னேறியுள்ள மேலை நாடுகளில் கூட தமிழர்களின் கலாச்சாரங்களையும், உணவு முறைகளையும் வியந்து பார்க்கின்றனர். நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்கை முறை தான் இதற்கு முக்கிய கரணம் ஆகும்.



      நமது முன்னோர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, வேப்பங்குச்சியால் பல் துலக்கி, ஒரு செம்பு மண்பானைத் தண்ணீர் குடித்து, காலை கடன்களை முடித்து, தான் வளர்க்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் மற்றும் உணவளித்து, வீட்டுத் தேவைக்கு மாட்டிலிருந்து பால் கறந்து, கம்பங்கூழ் அல்லது கேழ்வரகுக் கூழோ குடித்து, தங்களுடைய விவசாய வேலைகளைப் பார்க்க  சென்று விடுவார்கள். அயராது உழைப்பதற்கும், சுறுசுறுப்பிற்கும் பழந்தமிழர்கள் பெயர் பெற்றவர்கள்.

            நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைத்ததை மட்டுமே மண்ணுக்கு  உரமாக்கி விவசாயம் செய்தனர் அக்காலத்தில். அதனால் அம்மண்ணிலிருந்து அவர்களுக்கு கிடைத்த தானியங்களும், காய்கறிகளும், அளவில்லாத ஆரோக்கியத்தை கொடுத்தன. பழந்தமிழர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரங்களை நடுதல், மாட்டுச்சாணத்தை வைத்து வீட்டையும், முற்றத்தையும் சுத்தப்படுத்துதல், கிருமி நாசினியாக மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்தல், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து சுத்தமான மஞ்சள் அரைத்து குளித்தல், கருப்பட்டி, துளசி, இஞ்சி கலந்து கருப்பட்டி காபி குடித்தல், குழந்தைகளுக்கு சுகாதாரமான பசும்பால் கொடுத்தல், அதிக சத்துள்ள சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது போன்ற நல்ல வாழ்கை முறைகளோடு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காரணத்தால் உடல் வலிமையும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் பெற்றுறிருந்தனர்.



      இவ்வளவு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் கூட மனித இனத்தை கொரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ், நிபா வைரஸ் என்று பல விதமான வைரஸ்கள் பயந்து நடுங்க வைக்கின்றன. அன்றைய காலகட்டத்திலும் மோசமான வைரஸ்களும், அச்சுறுத்தும் பாக்டீரியாக்களும் இருக்கவே செய்தன. ஆனால் நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடலை ஆரோக்கியமாக வைத்திருந்ததுடன் மட்டுமல்லாமல் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருந்தனர் அக்காலத்தில்.

           இவ்வளவு சிறப்பான வாழ்வியல் முறைகளையும், ''உணவே மருந்து'' எனும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றியதால் தான் நாம் மட்டுமல்ல, மேலை நாட்டினரும், உலகிற்கே எடுத்துக்காட்டாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்களையும் பற்றி வியந்து போற்றுகின்றனர்.

Wednesday, 25 March 2020

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் நிலக்கடலை


         இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் விரும்பி உண்ணும் இயற்கையின் கொடை நிலக்கடலை. பூமியில் நிலக்கடலையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளையுடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது இது.

        இதன் உபயோகம் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம். நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பைத் தருகிறது. நிலக்கடலையில் உள்ள "பலிபீனால்" என்ற "ஆன்டிஆக்ஸிடென்ட் " அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் மிகவும் சத்தானவை என நினைக்கும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை  விட இது அதிக சத்துமிக்க உணவுப்பொருளாகும். இதிலுள்ள சத்துக்கள் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. ஞாபக சக்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.




    உலகின் சத்தான உணவுப் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது நிலக்கடலை. அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப்   பொருட்களின் பட்டியலில் கடலை முக்கிய இடம் பிடித்துள்ளது. நமக்கு எளிதாகக் கிடைப்பதால் இதை அலட்சியம் செய்கின்றோம். நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்பது முற்றிலும் தவறானது. நமது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் கடலையில் உள்ளது.

         கடலையுடன் வெல்லம் மற்றும் கருப்பட்டி சேர்த்துச் செய்த பலகாரங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தமிழகத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் இந்திய அளவில் புகழ் பெற்றவை.

   நிலக்கடலையில் நார்ச்சத்து, ப்ரோடீன், வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து, போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்துசத்துகளும் நிறைந்துள்ளது. இவ்வாறான மருத்துவ பயன்களையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நிலக்கடலையை அன்றாட வாழ்வில் அனைவரும் சாப்பிட்டு நமது ஆரோக்யத்தைக் காப்போம்.