Tuesday, 4 February 2020

பெரு நன்மை செய்யும் சிறு தானியங்கள்

நம் வாழ்வில் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கிராமிய விளைப்பொருட்களே சிறுதானியங்கள் அல்லது நவதானியங்கள் என அழைக்கப்படுகிறது. கம்பு, திணை, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, சோளம், வரகு இவைகளே சிறுதானியங்கள் (Millet). சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பெரும்பங்கு வகித்தது என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடியும்.



மரபு வழி உணவு வகைகளில், நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிராமங்களில் 80, 90 வயது கடந்தவர்கள் இன்றும் ஆரோக்கியமாக வாழ, இச்சிறுதானிய உணவு வகைகளே காரணமாகும்.

இவ்வளவு சிறப்புகளுடைய சிறு தானிய உணவு வகைகளை நம் வாழ்வில் இருந்து ஒதுக்கிவிட்டு மேலை நாடுகளின் உணவு பழக்கங்களுக்கு அடிமையானதே இன்றைய தலைமுறையினரின் ஆரோக்கியமற்ற வாழ்வுக்குக் காரணம். சமீப காலங்களில் சிறு தானியங்களுக்கு அதிக மவுசு உருவாகியுள்ளது. மேலை நாடுகளின் உணவுகள் மீதான மோகம் நம் மக்களுக்குக் குறையத் தொடங்கியுள்ளது.

சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் சிறுதானியங்களோடு கருப்பட்டி, வெல்லம் கலந்து தின்பண்டங்கள் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது ஒரு அன்றாட நிகழ்வு. இதிலிருந்து பழந்தமிழர் வாழ்வில் சிறுதானியங்கள் ஓர் முக்கிய இடத்தைப் பிடித்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் பல பள்ளிகளில் சிறு தானியங்களால் செய்யப்பட்ட பலகாரங்களை உணவு இடை வேலையின் போது கொண்டுவந்து சாப்பிடுமாறு குழந்தைகள் அறிவுறுத்தப்படுவது மிகப் பெரிய மாற்றமே

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தரும் சிறு தானிய உணவுகள், உணவுப்பொருட்கள், பலகாரங்கள் ஆகியவற்றை நாம் உண்டு இதை அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்வது நமது கடமையாகும்.

No comments:

Post a Comment